0

கோடி சுவாமிகள் புரவிபாளையம்..தொடர். (1)



கோடி சுவாமிகள்

அக்கிரமங்கள்  எல்லை மீறும்போது இயற்கையைச் சீறவிட்டு புயல், பூகம்பம், வெள்ளப் பெருக்கு என்ற பெயரில் ஒட்டு மொத்தத் தண்டனையை அரங்கேற்றுவது இறைவன் செயல் என்பது மிகப்பலரது நம்பிக்கை.

  அந்த இறைவன் தன்னை நேரிடையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் தேவ தூதர்களாக, மனிதத் தெய்வங்களாக அவதார புருஷர்களாக அகிலத்தை வலம் வரச் செய்யத் தவறியதே இல்லை. அதற்கு தேவ தூதர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்  கோடி சுவாமிகளை அடிக்கோடிட்டுக் காட்ட முடியும்.
  ஆன்மீக நாயகனை, அற்புதங்களின் நிலைக்களனை தரிசிக்கவும், அவரது உன்னதத் தன்மைகளை உலகுக்குப் பறைசாற்றவும் இந்தப் புனித பயணம் மேற்கொள்கிறோம்.
பசுமை
      கோவை மாநகரில் இருந்து தெற்கு திசை நோக்கி நமது பயணம் தொடங்குகிறது. நகர எல்லையைக் கடந்ததும் பசுமையின் ஏகபோகம் தொடங்கி விடுகிறது. தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்று நெஞ்சத்தை இதமாக்குகிறது. பொள்ளாச்சி சென்று அங்கிருந்து புரவிபாளையத்துக்கு பஸ் பிடிக்கிறோம்.     

வண்ணக்கோலம்!
      பழமைச் சிறப்பை மட்டும் அல்ல. அந்தக் கட்டிடம் கம்பீரத்தையும் பறைசாற்றத்  தவறவில்லை. அந்த ஒட்டு மொத்த அமைப்பில் ஓர் ஆழ்ந்த தெய்வீக அமைதி குடி கொண்டு இருந்தது. மாளிகைக் காம்பவுண்டுக்குள் ஒரு விசாலமான மைதானம். நாம் சென்றபோது அது பக்தர்களால் நிரம்பி இருந்தது.

கோடி சுவாமிகள்!
      கோடிசுவாமிகள் அனைத்தையும் கடந்தவர். நிகரில்லாதவர். அவரைப் பற்றி முழுமையாக அறியும் சக்தி யாருக்கும் இல்லை. அவரைச் சரணடைந்தவர்கள் குன்றென உயர்ந்து நிற்கின்றனர். அவரை வைத்து ஆதாயம் தேட எண்ணுவோர் காணாமல் போய் விடுகின்றனர்.                      
அய்யப்பன் சொன்ன தகவல்:
       நானும் அவர் பாதத்தில் கிடப்பவன்தான். எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று அவரிடம் கேட்டது இல்லை. ஆனால் விலை மதிக்க முடியாத நிம்மதியை  நிரந்தரமாக எனக்குக் கொடுத்துள்ளார்.
      மனிதனுக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? உண்மைதான். நிம்மதிக்காக ஏங்கித் தவிக்கும் மனித குலத்துக்கு அது மட்டும் நிரந்தரமாகி விட்டால் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமல்லவா?

ஞானப்பார்வை
லட்சோப லட்சம் அன்பர்களின் இதயக் கோவிலில் குடி கொண்டிருக்கும் அந்த மனித தெய்வத்தை 10 அடி தூரத்தில் இருந்து பார்க்கிறோம். செக்கச் சிவந்த நிறம். சாந்தம் தவழும் தாத்தா முகம் அதிலே அடர்ந்த வெண் தாடி, மெய் சிலிர்க்கும் ஞானப்பார்வை.  மெய்யன்பருக்கு அபயம் அளித்து அரவணைக்கும் ஆழ்ந்த பரிவு இத்தனையும் சங்கமம் ஆன, அந்த ஆன்மீகப் பிழம்பு நமக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கவே செய்தது.  

தொடரும்...


Do you like this story?

No comments

Leave a Reply

Feeds